Saturday, June 19, 2010

பெண் ஏன் அடிமையானாள்? தொகுப்பிலிருந்து, தந்தை பெரியார்

பெண் ஏன் அடிமையானாள்? தொகுப்பிலிருந்து, தந்தை பெரியார்
‘இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகின்றது.’
அன்பு, ஆசை,  நட்பு என்பவற்றின் பொருளைத் தவிர, வேறு  பொருளை கொண்டதென்று சொல்லும் படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் – பெண் சம்மந்தத்தில் இல்லை என்பதை விவரிக்கவே இவ்வியாசம் எழுதப்படுவதாகும். ஏனெனில், உலகத்தில் காதல் என்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி ,அதனுள் ஏதோ பிரமாதமான தன்மை ஒன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் -பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மயங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல்,  திருப்தி இல்லாமல்,  தொல்லைபடுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவேயாகும்.
ஆனால், காதல் என்றால் என்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்ததெ ந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வெப்போது மறைகின்றது ? அப்படி மறைந்து போய் விடுவதற்கும் காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்,   உண்மையற்ற தன்மையும், நித்தியமற்ற தன்மையும்,(காதலை) அதைப் பிரமாதப் படுத்துவதின் அசட்டுத் தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால் , அந்தப்படி யோசிப்பதற்கு முன்பே இந்தக் காதல் என்கின்ற வார்த்தையானது இப்போது எந்த அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது? உலக வழக்கில் அது எப்படி பயன் படுத்தப்பட்டு வருகின்றது? இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத் தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல  என்றும் அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு,  காதல் வேறு என்றும், “அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்”  என்றும், அதுவும்  “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும்  “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,“அதுவும்  ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்”  என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக- இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும், பிறகு வேறொருவரிடமும் காதல் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும், மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமோ, மோகமோ, விரகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.
மேலும் ,இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,  ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப் படுத்தியும் வரப்படு கின்றது.
இதன் பலாபலன் எப்படியிருந்தாலும்  இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம் உலக அனுபவமும், மக்க ள் தன்மையின் அனுபவஞானமும் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கை த் தன்மையையும்  உண்மையையும் அறியாதவர்கள் என்றோ ,அல்லது உண்மையை அறிந்தும் வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக வேண்டி வேண்டுமென்றோ மறைக்கின்றவர்கள் என்றே தான் கருதவேண்டி இருக்கின்றது.
அன்றியும், இந்த மாதிரி விஷயங்களைப் பற்றி நாம் சொல்லும் மற்றொரு விஷயமென்னவென்றால், இன்று பெரும்பான்மை மக்கள் ‘காதலன்-காதலியாக’ வாழ்வதன் தன்மையெல்லாம் வேறு ஒருவர் ஜோடி பார்த்துச் சேர்த்ததும், பிள்ளைகளைப் பெறுவதற்கென்றும் , வீட்டு வாழ்க்கையின் உதவிக்கென்றும் , இயற்கை உணர்ச்சிக்கும்,  பரிகாரத்திற்கென்றும் சேர்க்கப் படுகின்ற ஜோடிகளாகத் தான் இருந்து வருகிறதே தவிர,  தாங்களாகத் தங்கள் காதல் மிகுதியால் காதல் தெய்வத்தால் கூட்டுவித்ததைக் காணுவது அருமையாக இருக்கிறது.இது எப்படி இருந்தாலும் எந்தக் காரணத்திற்கு ஆனாலும் , ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை,  காதல்,  காமம்,  நட்பு,  நேசம், மோகம்,  விரகம் முதலாகியவைகளைப்பற்றி மற்றொரு பெண்ணோ, ஆணோ மற்ற மூன்றாமவர்கள் யாராவதோ பேசுவதற்கோ நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறிதுகூட உரிமையே கிடையாது என்றும் சொல்லுகிறோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய் தைரியமாய் மனித இயற்கையையும்,  சுதந்திரத்தையும்,   சுபாவத்தையும் அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால்,  இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் , தனக்குப்பிடித்த பலகாரக்கடையில் பலகாரம் வாங்குவது போலவும், சாமான் கடைகளில் சாமான் வாங்குவது போலவும் அவனவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகுமென்றும் சொல்ல வேண்டும்.
இப்படிச் சொல்லப்படுவது கூட இவ்வளவு பெருமையையும், அணி யையும், அலங்காரத்தையும் கொடுத்து பேசப்பட்ட காதல் என்பதை முன் குறிப்பிட்டபடி, அது என்ன? அது எப்படி உண்டாகின்றது? என்பதை யோசித்துப்பார்த்தால் யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும். காதல் என்கின்ற வார்த்தை தமிழா? வடமொழியா என்பது ஒரு புறமிருந்தாலும், தமிழ் மொழியாகவே வைத்துக்கொண்டாலும் அதற்கு ஆண், பெண் கூட்டுத் துறையில் அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம் என்பவைகளைத் தவிர வேறுபொருள்கள் எங்கும் எதிலும் காணப்படவில்லை.
அன்றியும், அகராதியில் பார்த்தாலும் மேற்கண்ட பொருளைத்தவிர வடமொழி மூலத்தை அனுசரித்தால்  காதல் என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல், முறித்தல் என்கின்ற பொருள்கள்தான் கூறப்பட்டிருக்கின்றன. மற்றபடி, தனித் தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண் -பெண்  சேர்க்கை, கூட்டு முதலாகியவை சம்மந்தமான விஷயங்களுக்கும், அன்பு, ஆசை, நட்பு, நேசம் என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும் நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன் காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும் இக்கருத்துக்களையே தான் மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக் கூறப்படுகின்றதே தவிர காதலுக்கென்று வேறு பொருள் காணப்படவில்லை.
ஆதலால், இவைகளன்றி காதல் என்பதற்கு வேறு தனி அர்த்தம் சொல்லுகின்றவர்கள் அதை எதிலிருந்து எந்தப் பிரயோகத்திலிருந்து கண்டுபிடித்தார்கள் என்பது  நமக்கு விளங்கவில்லை.

நிற்க ,இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும்,  உருவத்தையோ,  நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.
இந்தப் படியும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடத்தில் காதல் ஏற்பட்டு, அந்தப் பெண்ணுக்கு அந்த ஆணிடத்தில் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். இந்தப்படியே ஒரு பெண் ணுக்கு ஒரு ஆணிடம் காதல் ஏற்பட்டு அந்த ஆணுக்கு அந்தப் பெண்ணிடம் காதல் ஏற்படாமல் போனாலும் போகலாம். எப்படியும் ஒரு மனிதன் ஒரு வஸ்துவைப் பார்த்த மாத்திரத்தில், கேட்ட மாத்திரத்தில் தெரிந்த மாத்திரத்தில் அந்த வஸ்து தனக்கு இருக்கலாம் – வேண்டுமென்பதாக ஆசைப்படுகின்றானோ, ஆவல் கொள்கி றானோ அதுபோல்தான் இந்த காதல் என்பதும் ஏற்படுவதாயிருக்கின்றதே தவிர, வேறு எந்த வழியிலாவது ஏற்படுகின்றதா என்பது  நமக்குப் புலப் படவில்லை.

எப்படிப்பட்ட காதலும் ஒரு சுய லட்சியத்தை அதாவது தனது இஷ்டத்தை , திருப்தியைக் கோரத்தான் ஏற்படுகின்றதே தவிர வேறில்லை என்பதும் காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தை கவனித்தால் விளங்காமல் போகாது.
அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, சங்கீதத்தைக் கொண்டோ, சாயலைக் கொண்டோ, பெற்றோர் பெருமையைக் கொண்டோ, தனது போக போக்கியத்திற்கு பயன்படுவதைக்கொண்டோ,  அல்லது மற்ற ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவை யான ஒரு காரியத்தையோ, குணத்தையோ கொண்டே தான் யாரும் எந்தப் பெண் ணிடமும்,ஆணிடமும் காதல் கொள்ளமுடியும். அப்படிப்பட்ட அந்தக் காரியங்களெல்லாம் ஒருவன் காதல் கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது அங்கு இருப்பதாக அவன் நினைத்துக் காதல் கொண்டு இருந்தாலும் இருக்கலாம் -அல்லது வேறு மாத்திரத்தில் காட்டப் பட்டதாக  இருந்தாலும் இருக்கலாம்.
உதாரணமாக, ஒரு நந்தவனத்தில் ஒரு பெண் உல்லாசமாய் உலாத்துவதை ஒரு ஆண் பார்க்கின்றான். பார்த்தவுடன் அந்தப் பெண்ணும் பார்க்கின்றாள். இரண்டு பேருக்கும் இயற்கையாய் ஆசை உண்டாகிவிட்டது. பிறகு நீ யார் என்று இவர்களில் யாரோ ஒருவர் கேட்கிறார்கள். பெண் தன்னை ஒரு அரசன் குமார்த்தி என்று சொல்லுகிறாள். உடனே ஆண் காதல் கொண்டு விடுகிறான். இவனை யார் என்று அவள் கேட்கிறாள். இவன் தான் ஒரு சேவகனுடைய மகன் என்று சொல்லுகிறான். உடனே அவளுக்கு அசிங்கப்பட்டு, வெறுப்பேற்பட்டுப் போய்விட்டது. இது சாதாரணமாய் நிகழும் நிகழ்ச்சி. இங்கு ஏற்பட்ட காதல் எதை உத்தேசித்தது?

நிற்க, அவன் தன்னை சேவகன் மகன் என்று சொல்லாமல் தானும் ஒரு பக்கத்து தேசத்து ராஜகுமாரன் என்று சொல்லி விட்டால் அவளுக்கு அதிக காதல் ஏற்பட்டு “மறு ஜென்மத்திலும்” இவனை விட்டுப் பிரியக் கூடாது என்று கருதிவிடுகிறாள். 4-நாள் பொறுத்த பின்புதான் காதல் கொண்டவன் அரச குமாரன் அல்ல என்றும், சேவகன் மகன் என்று அறிந்தாள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிலையில் அந்தக் காதல் அப்படியே இருக்குமா? அல்லது இருந்தாகவேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்தால் காதல் ஏற்படும் தன்மையும், மறுக்கும் தன்மையும் விளங்கும். இந்தப் படிக்கே ஒரு பெண்ணை நோயல்லாதவள் என்று கருதி ஒருவன் காதல் கொண்டபின் நோயுடையவள் என்று தெரிந்தது அல்லது மற்றவனுடைய மனைவி என்று தெரிந்தது அல்லது ஒரு தாசி என்று தெரிந்தது அல்லது தன்னை மோசம் செய்து தன்னிடம் உள்ள பொருளை அபகரிக்க வந்தவள் என்று தெரிந்தது. இதுபோலவே இன்னமும் தான் முதலில் நினைத்த தற்கு அல்லது தனது நன்மைக்கும்இ திருப்திக்கும்இ இஷ்டத்திற்கும் விரோதமாயோ தான் எதிர்பார்க்காத கெட்டகாரியத்திற்கு அனுகூலமாகவோ ஏற்பட்டுவிட்டால் அந்தக் காதல் பயன் படுமா? அதை எவ்வளவுதான் கட்டிப்போட்டாலும் அது இருக்க முடியுமா? என்பவைகளை யோசித்தால் ‘உண்மைக் காதலின்’ நிலையற்ற தன்மை விளங்காமல் போகாது.
நிற்க, உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.
காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு, கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங் களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்.
ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் ,இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துறவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல்   போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.
அதுபோலவே ,மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.
உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்த காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண்- பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண், பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி- எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும்  பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார்களோ அது போலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வே ஷசம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும்,  எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால், பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், உண்மையான காதல்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.
ஆகவே , ஆசையை விட,  அன்பை விட,  நட்பை விட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்;  அவ்வன்பு, ஆசை,  நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள்  இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து,  நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து,  மனப்பான்மையில் இருந்து,  தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும்; அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும்,  மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும்  நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.
ஆனால், அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்.
இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’  ‘அது காதலுக்கு விரோதம்’ ‘அது காம இச்சை’  ‘ இது மிருக இச்சை’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு வித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.
———————————————————————————————–
பெண் ஏன் அடிமையானாள்?
தொகுப்பிலிருந்து,

 நன்றி:
தூமை

Wednesday, June 2, 2010

காதல் விதிகள-ரிச்சர்ட் டெம்ப்ளர்

 காதல் விதிகள்-ரிச்சர்ட் டெம்ப்ளர்(The Rules of Love) எனும் பு‌கழ்பெற்ற புத்தகத்தின் தமிழாக்கம்


விலை ரூ.150/-
என்னவளுக்காக வாங்கினேன்,
ப‌டித்த பின்னர் தான் தெரிந்தது பல  விவரங்கள்,
காதலிக்கும் முன்பாக இருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் என்பது என்கருத்து,

புத்தகத்தின் பின்அட்டையில் உள்ள வாகசத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உங்கள் உறவுகள் மேம்படுவதற்கான உன்னதமான விதிகள்

ஆதாம் ஏவாள் காலம் முதல் மனதனை சுழற்றியடிக்கும் ஒரு மந்திர சக்தி, காதல், காதல்தான் பல சாம்ராஜ்ஜியங்களை அழித்திருக்கிறது.  ஆனால் அதே காதல்தான் பல சாதாரண மனிதர்களை சாதனையாளராக உயர்த்துவதற்கும் தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
 
உலக இலக்கியங்கள் காதலைத்தான் கொண்டாடி மகிழ்ந்துள்ளன.  காதல் மட்டும் இல்லாமல் போனால் இந்த உலகம் உப்போதோ அழிந்து போயிருக்கும் என்பது எல்லோரும் ஒப்புக் கொள்ளக்கூடிய வாசகமாக இருக்கிறது.
ஆனால் படிப்பில், பொது அறிவில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள் கூட காதல் என்று வந்துவிட்டால் எல். கே.ஜி ஸ்டூடண்ட் ஆகிவிடுகிறார்கள்.  ஆம், காதலை வெல்வதும், அடைவதும் அத்தனை சுலபமல்ல.  மனிதனுக்குக் காதல் உணர்வு மட்டும் தான் சுலபமாக வருகிறது.  ஆனால் காதலை தன் வசப்படுத்துவது என்பது இன்றுவரை பலருக்கு எட்டார நிலவு.  பலபேர் ‌‌"ஐ லவ் யூ" வை பரிட்சை போல பலமுறை முயற்சி செய்து பாபர்த்தாலும் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள்.  நம் அணுகு முறையில், குணத்தில், நடத்தையில் சிறு மாற்றங்களைக் கொண்டு வந்‌தாலே போதும்,  காதல் பூங்கொத்து நம் கையில் என்று அடித்துச் சொல்கிறது இந்தப்புத்தகம்.

விமர்சனம் ‌தொடரும்...............